“இன் ஹர் ஹேண்ட்ஸ்” - (நெட்ஃப்ளிக்ஸ்) - (ஆப்கன் நாட்டு ஆவணப்படம்)-(2022) சொந்த மண்ணை விட்டு, உயிர் பிழைத்தால் போதும் என தப்பித்து ஓடுகிற கூட்டம்; ஓடுபாதையிலிருக்கும் விமானத்தில், எப்படியேனும் இடம் பிடிக்க ஓடுகின்ற மனித அவலத்தை, துயரத்தை, நீங்கள் கண்டதுண்டா? கல் மனதையும் உலுக்கும் இக்காட்சி யுடன் தொடங்குகிறது “இன் ஹர் ஹேண்ட்ஸ்”என்ற ஆப்கன் நாட்டு ஆவணப்படம். ஏன், சொந்த மண்ணை விட்டு ஓடுகிறார்கள்? பெண்கள் உயர்கல்வி பயிலச் சென்றால், கல்விச் சாலையை அழி; விபச்சாரம் செய்தால் கல்லால் அடித்துக் கொல்; திருடி னால் கையை வெட்டு; தன்பாலின சேர்க்கையில் ஈடுபடு வோரை, உயிரோடு மண்ணுக்குள் புதை; இதுதான் மெய்யான ஷரியத் சட்டத்தை அமல்படுத்தும் வழிகள்; என சூளுரைக்கும் தலிபான்கள் ஆட்சியின் கீழ், வாழ அஞ்சி, தன் தாய் மண்ணை தன் ஒட்டுத் துணியில் சுருட்டி எடுத்துக் கொண்டு, நாட்டை விட்டு ஓடுகிறார்கள். ஐம்பதாண்டுகளாக உள்நாட்டுப் போர், மத அடிப்படை வாதிகள் ஆட்சி என சின்னாபின்னப்பட்ட நாடு என்னாகும்? சுடுகாடாகும். பாலின சமத்துவம், பெண் கல்வி, பெண்ணு ரிமை, வேலைவாய்ப்பு என்பதெல்லாம் கானல் நீராகும். ஆப்கனில், 1979இல் ரஷ்ய படைகள் நஜிபுல்லா அரசுக்கு ஆதரவாக நுழைந்தது. 1989இல், அமெரிக்கா முஜாகிதீன்களுக்குப் பயிற்சி, படை உதவி அளித்து ரஷ்யப்படைகளை வெளியேற நிர்ப்பந்தித்தது. பின்னர் இந்த அமைப்பு தலிபான் எனும் இஸ்லாமிய அடிப்படை வாத அமைப்பாகியது. 9/11 இரட்டை கோபுரத் தாக்குத லின் பின் தலிபான்களை அழிக்க அமெரிக்க நேட்டோ படைகள் ஆப்கனில் நுழைந்து, தங்கள் கைப்பாவை அரசை நிறுவி, அங்கேயே முகாமிட்டது.
2 டிரில்லியன் டாலர்கள்; பல்லாயிரம் உயிர்களைக் காவு கொடுத்தும், தலிபான்களை வெல்லமுடியாமல் 2021இல் மீண்டும் தலி பான்களிடம் ஆட்சியை ஒப்படைத்துவிட்டு அமெரிக்கா ஓடுகிறது. அமெரிக்கப்படைகள் வெளியேறும் நாளுக்கு முன்பான 19 மாத காலத்தின் நிகழ்வுகளையும், அதன் பின்னரான 7மாத நிகழ்வுகளையும் “மைதான் வார்டாக்” நகர மேயரான இளம்பெண் ஜாரீபா மற்றும் அவரது பாதுகாவலன் மாஷோசும் ஆகியோர் பார்வை வழியே சொல்கிறது இந்த ஆவணப்படம். ஒருபுறம் தலிபான்கள் மறுபுறம் ஆளும் அரசு என இரு மத அடிப்படைவாதிகளின் தாக்குதல்களையும் தனி யாளாக எதிர்கொண்டு, பெண்ணுரிமை மற்றும் பெண் கல்விக்கான போராட்டத்தை ஜாரீபா நடத்துகிறாள்.இதனால் வெகுண்ட தலிபான்கள் அவளது தந்தையைப் படுகொலை செய்கின்றனர். ஜாரீபாவும் பல கொலை முயற்சிகளிலிருந்து தப்புகிறார். ஆனால் பெண் விடு தலைக்கான போராட்டத்தைத் தொடர்கிறார். இதனை நேரடி அனுபவங்களின் இரத்தவாடைச் சாட்சியங்களுடன் விவரித்து அதிரவைக்கிறது இந்த ஆவணப்படம். ஆப்கன் பெண்களின் நிலையை நேரில் பார்த்த அனு பவங்களாக, பல சம்பவங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. தலிபான் அமைப்பின் கிளைத் தலைவனான முல்லா நியாஷி “ஜாரீபா போன்ற ஒரு பெண் சுதந்திரமாக மாகா ணம் முழுவதும் சுற்றி வருவது, நாட்டில் களங்கத்தை ஏற்படுத்தி விட்டது. இவளை, தயக்கமின்றிக் கொல்ல, கடவுள் கட்டளையிட்டுள்ளார்”எனப் பிரசங்கம் செய்கின்ற காட்சியும்... ஜாரீபா ஆட்ட பாட்டத்துடன் மேயர் அலுவலகம் செல்கையில், சாலையோரக்கடை வைத்திருக்கும் பெரியவர்,
“எந்த மாகாணத்திலும் பெண் மேயர் இல்லை. இங்கு மட்டும் ஏன்? பெண் ஆணுக்கு நிகரானவளா? ஆண், மரத்தை போல் வலிமையானவன். பெண், வீட்டை பாதுகாத்து, சமைத்து போடுபவள் மட்டுமே. எனவே ஆண் களுக்குக் கட்டளை இடும் பொறுப்பில் பெண்வரக் கூடாது” என நகைப்புடன் அளிக்கின்ற பேட்டியும்... ஜாரீபாவுக்கு நிச்சயிக்கப்பட்ட மணமகன் பஷீர், கல்யாணத்திற்கு முன் ஜாரீபாவின் வீட்டுக்கு வருவதை அவரது தந்தை எதிர்ப்பது; உள்ளிட்ட பல பிற்போக்குத்தன மான விசயங்கள் பொதுப்புத்தியிலும் உறைந்து போயுள்ளது என்பதைக் காட்டுகிறவை. “தலிபான்கள் பெண்கள் கல்வி கற்பதை விரும்ப மாட்டார்கள்; ஏனென்றால் இவர்கள் கேள்வி எழுப்பு வார்கள். மதபீடம் எப்போதும் கேள்விக்கு பயப்படும்” என்கிறாள் ஜாரீபா.இது பொருள் பொதிந்தது. அடுத்து மலையக மக்களிடம் “ஒரு குழந்தை படித்தால் பத்து தலைமுறை பாதுகாக்கப்படும்” என்று கூறும் காட்சியை அடுத்து விடிகாலைச் சூரிய ஒளிக்கீற்றில் பளபளக்கும் மலைத்தொடர்களின் காட்சியும் அடுத்து, பள்ளியில் பெண்குழந்தைகள் கேள்விக் கேட்டுப் பயிலு கின்ற காட்சியும், பின்னணி இசையும் இணைந்த மாண்டேஜ் காட்சிகள், எதிர்கால நம்பிக்கைக் கீற்று. வாஷிங்டனில் உலக சாதனையாளர் விருதுபெறும் ஜாரிபா, ஆப்கனை விட்டு வெளியேறியபோதும் தலி பான்களிடமிருந்து, தங்களுக்கு பாதுகாப்பு அரணாக இருக்கும் வகையில் அமெரிக்காவின் தொடர்ச்சியான ஆதரவு வேண்டும் என்று கோருகிறார். இது ஜாரீபாவின் சித்தாந்தத் தெளிவின்மையைக் காட்டுகிறது. ஜாரீபாவின் கார் ஓட்டுநரும், பாதுகாவலருமான மாஷோசும், ஒரு கையில் கார் ஸ்டீரியங்கும்,ஒரு கையில் கைத்துப்பாக்கியுடனும் காரை இயக்குவது, ஒவ்வொரு நொடியும் உயிராபத்தானது என்பதை வெளிச்சமிடுகிறது. அரசு படையில் இருந்தால், தாலிபான் சுடுவான். தலிபான் படையில் இருந்தால் அரசுப் படை கொல்லும். இரண்டுக்கும் இடையே அல்லாடும் மாஷோசும் வாழ்வு மூலம், ஆப்கன் இளைஞர்களின் நிச்சயமற்ற வாழ்வு உணர்த்தப்படுகிறது. “என் நாடு ஏழைகளால் நிரம்பியுள்ளது.இனி நாட்டை அழிக்க வெடிமருந்துகள் தேவையில்லை” என்ற மாஷோசும் கூற்று, தலிபான்களின் ஆட்சியில் ஆப்கன் நாட்டின் அவலநிலையை விளக்கும்.
ஜாரீபா, மேயர் பதவியை திடீரென தூக்கி எறிந்து விட்டு, புதிய ராணுவப் பணிக்காக காபூல் செல்வாள். அதுவரை அவளை நம்பிவந்த பாதுகாவலன் மாஷோசுமை நட்டாற்றில் விடுகிறாள். தலிபான் ஆட்சி யேற்றபின் ஜெர்மனிக்கு குடும்பத்தோடு தப்பிக்கும் ஜாரீபா, தலிபான்கள் ஆட்சியில் பெண்கள் தங்களது உரிமைகளுக்காக தெருவில் போராடுகின்ற செய்தியை அறிந்து, தான் அவர்களோடு இணைந்து போராடாததை நினைத்தும், நாட்டைவிட்டு தப்பித்தது குறித்தும் குற்றவுணர்ச்சி கொள்கிறாள். பின்னர், இந்த இரு நிகழ்வுகளையும் நியாயப்படுத்தவும் முனைகிறாள். இது ஜாரீபாவின் முரண்பாட்டை காட்டுகிறது. படத்தின் பின்னணி இசை தலிபான்களின் கொடூரங்களை பேசும் தீம்மேட்டிக் thematic வகை. மார்ஷல் மெட்டலிஷிபன் மற்றும் டமனி அயஷி ஆகியோர் இயக்கியுள்ளனர். ஆவணப் படத்திற்குரிய தொய்வு இன்றி, படத்தொகுப்பு சிறப்பாக அமைக்கப் பட்டுள்ளது. காபூல் நிலக்காட்சிகள் தூரத்திலும், வான் வெளிக்காட்சியிலும் அற்புதமாக ஓளிப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பெண்களுக்கு உடை கட்டுப்பாடு, வேலைவாய்ப்பு, விடுதலை உள்ளிட்ட உரிமைகளில் முழுக் கட்டுப்பாடு களையும், பெண்களின் மேல்நிலைத் கல்விக்கு முழுத் தடையும் தற்போதைய தலிபான் அரசு விதித்துள்ளது; என்ற செய்தியுடன் ஆவணப்படம் முடிகிறது.